


நம்பிக்கையா? எண்ணிக்கையா?
கேள்வி: சுவாமிஜி, நமஸ்காரம். பெற்றோர்களின் ஆதங்கத்தைப் புரிந்து கொண்டு விஜயம் செயல் படுவதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறோம்.
முதல் கேள்வியாக, நமது நாட்டின் எல்லாச் சமயங்களிலும் உள்ள கோடிக்கணக்கான இந்திய மக்களின் இதயங்களைத் துளைத்துக் கொண்டிருக்கும் இந்தக் கேள்விக்குப் பதில் தாருங்கள்.
பெஹல்காமில் சென்ற மாதத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் அப்பாவி இந்துக்கள் 26 பேரைக் கொடுமையாகச் சுட்டுக் கொன்றார்கள்.
பயங்கரவாதிகளுக்கு மதம் இல்லை என்று பலர் கூறுகிறார்கள். ஆனால் மத அடையாளத்
தின் அடிப்படையில்தான் அவர்கள் அந்த இந்துக்களைச் சுட்டுள்ளார்கள்.
எங்கோ இவ்வாறு நடப்பதெல்லாம் பெற்றோர்களாகிய எங்களுக்கு அச்சத்தைத் தருகிறது. எங்கள் குழந்தைகளோடு படிக்கும் மாற்று மத சக மாணவர்களிடத்தில் நாங்கள் நம்பிக்கை இழந்து விடுவோமோ? அவர்களை எங்கள் குழந்தைகளும் நாங்களும் ஆத்மார்த்தமாக நேசிக்க முடியாதோ என்று பயமாக இருக்கிறது.
இது போன்ற சிக்கலான காலகட்டத்தில் ஒரு மதத்தை வாழ்க்கைமுறையை மற்றவர்களுக்குப் போதிக்கும் மதத்தலைவர்கள் என்ன செய்ய வேண்டும்? இந்த டென்ஷனை அவர்கள் எப்படிக் குறைக்க வேண்டும்?
குறைந்தபட்சம் மாணவர்களின் பெற்றோர்களாகிய நாங்கள் இது போன்ற சூழ்நிலைகளை எப்படிக் கையாள்வது?
-கோடிக்கணக்கான பெற்றோர்களின் ஒரு பிரதிநிதி, ஒரு மாணவனின் தாய் நான், செங்கல்பட்டு.
பதில்: நீங்கள் பொறுப்புள்ள பெற்றோர் என்பதைப் புரிந்துள்ளீர்கள்; பிறருக்கும் புரிய வைத்துள்ளீர்கள். பாராட்டுகள் அம்மா.
மதத்தின் அடிப்படையில் திடீர் திடீரென்று கொந்தளிப்பது அல்லது கொந்தளிக்க வைப்பது நமது நாட்டில் பல காலமாகப் பரவி விட்ட ஒரு புற்றுநோய்.
மதக்கலவரத்தைத் தூண்டி விடுபவர்கள் மத அடிப்படைவாதிகள் மற்றும் சில அரசியல் வியாதிகள் என்பது எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் அந்த நச்சுக்கொடியை வேரடி மண்ணோடு எடுக்க இப்போதுதான் அரசானது துணிவும் திட்டமும் எடுத்து செயல்படுத்தி வருகிறது. முன்பெல்லாம் அது நடக்கவில்லை.
ஓர் இல்லத் தலைவிக்கு இருக்கும் இந்தப் பொறுப்புணர்வும், தேசநல சிந்தனையும் பல அரசியல் தலைவர்களுக்கும் சமயத் தலைவர்களுக்கும் மங்கி இருப்பது மனதை நெருடுகிறது.
நம்மால் என்ன செய்ய முடியும் என்று பெற்றோர்கள் ஒதுங்கி விடாமல் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற பொறுப்புணர்வில் சிலவற்றை நாம் சேர்ந்து சிந்திப்போம்.
1. ’மதம் பிடித்த’ பல தலைவர்கள் தங்களது மதத்தைப் பரப்புவதற்கு இறைநம்பிக்கையைவிட தங்களோடு இருப்பவர்களின் எண்ணிக்கையையே நம்புவது பெரும் துரதிர்ஷ்டம். அதுதான் இந்தப் பெரும் பிரச்சினைக்கு மூல காரணம் போல் தோன்றுகிறது. எண்ணிக்கையை ஏற்றுபவர்களுக்கு ஏராளமான பணம் வெளிநாடுகளில் இருந்து வருகிறது.
2. மதம் பிடித்த தலைவர்கள் தீவிரவாதிகளுக்கு நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ ஆதரவு தருவது விரைவில் அந்த மதத்திற்குப் பெரும் ஆபத்தாக முடிகிறது என்ற உண்மையை உணர வேண்டும்.
3. மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிரித்து அதில் கொள்ளையடிக்கும் கூட்டம் உலகம் முழுவதும் உள்ளது. இவர்கள் தீவிரவாதிகள் அல்ல, பயங்கரவாதிகள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
4. பயங்கரவாதிகளுக்கு மதம் இல்லை என்று பொறுப்பற்றவர்கள் சொல்வார்கள். ஆனால் மதத் தலைவர்களிடமிருந்து உலகம் கேட்க நினைப்பது இதையல்ல.
5. ‘‘எங்கள் மதத்தில் பயங்கரவாதிகளுக்கு இடமில்லை’’ என்று சொல்லும் நேர்மை, பொறுப்பு, துணிச்சல் ஆகியவை மதத்தலைவர்களுக்கு மிக மிக முக்கியம். ’பயங்கரவாதம் என்ற சாக்கடையில் ஒருவன் சுகம் கண்டால் அவனை எங்கள் மதத்திலிருந்து தள்ளி வைப்போம்’ என்று கூறும் துணிச்சலைத்தான் உலகம் எதிர்பார்க்கிறது.
அப்படிப்பட்ட துணிச்சல் மதத்தலைவர்களிடம் இருக்கிறதா என்று தேடிப் பாருங்கள்.
பொறுப்புள்ள மாணவனின் தாயே, நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்திருந்தாலும் உங்கள் சொந்த மத அடையாளங்களையும் நம்பிக்கைகளையும் அருமையான விஷயங்களையும் கெட்டியாகப் பற்றியிருங்கள்.
அதே சமயம் நீங்களும் உங்கள் குழந்தைகளும் மாற்று மதத்தினரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்; கவனமாகவும் இருக்கக் கற்றுக் கொடுங்கள்.
ஏனென்றால் சாத்தானுக்கு மதம் இல்லை. அவன் எப்படி வேண்டுமானாலும் நல்லவர்
களிடையே ஊடுருவி விடலாம்.
எல்லா மதச் சம்பிரதாயங்களையும் கடைப்பிடித்து அவற்றின் மூலம் ஆன்மிக உண்மையை உணர்ந்த பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், ‘‘பக்தனாய் இரு; முட்டாளாகிவிடாதே’’ என்று கூறினார். இந்த முக்கியமான ஒரு விஷயத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.
கேள்வி: ஜூன் மாதத்தில் பள்ளி திறந்ததும் ஆசிரியர்களாகிய நாங்கள் மாணவர்களுக்கு இனிப்பும் பூவும் புன்னகையும் கொடுத்துச் சம்பிரதாயமாக வரவேற்போம். நாங்கள் வேறு என்ன செய்தால் நன்றாக இருக்கும் என்று கூறவும். - ஆசிரியை கோகிலவாணி, திருப்பத்தூர்.
பதில்: அன்பார்ந்த ஆசிரியரே, முதல் நாளில் உங்கள் மாணவ - மாணவிகளை நீங்கள் வரவேற்கும் விதம் நன்றாக இருக்கிறது. மேற்கூறியவை நல்லவைதான்.
ஆனால் மெக்காலே கல்வி படித்த ஆசிரியர்களாகிய நீங்கள் நமது இந்து மதத்தின் சம்பிரதாயமும் பாரம்பரியத்தைப் பற்றியும் ஒரு சில விஷயங்களையாவது அறிந்து கொள்ள வேண்டும்.
பூ, இனிப்பு போன்றவை வெளிப் பொருட்கள். இவற்றைவிட உங்களுக்குள் இருக்கும் சிரத்தை, ஈடுபாடு, அறிவுத்தாகம், சேவை மனப்பான்மை போன்றவற்றை உங்கள் மாணவர்களுக்கு நீங்கள் வழங்க முடியுமா?
மாணவர்களிடத்தின் அடிமனங்களில் குடிகொண்டிருக்கும் கற்பதில் ஆர்வம், மனதையும் புத்தியையும் கூர்மையாக வைத்திருக்கும் திறன், தன்னம்பிக்கை, தைரியம், சாதிக்க வேண்டும் என்ற எண்ணம், புகழ் பெற வேண்டும் என்ற உத்வேகம், நானும் முன்னேறி, பிறரையும் முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கம் ஆகியவற்றை மாணவர்களிடத்தில் மெல்ல மெல்லத் தூண்டிவிட முடியுமா?
அவ்வாறு தூண்டிவிடும் எண்ணங்களின் பூக்களையே அவர்கள் விரும்புவார்கள். அதுவே அவர்களுக்கு அவசியம் தேவை. அப்படி நல்லவற்றை மாணவர்களிடத்தில் தூண்டி விடுபவர் நீங்கள் என்பதை முதல் நாளிலேயே உங்களால், உணர்த்த முடிந்தால் நல்லாசிரியர் நீங்கள் தான்!
கேள்வி: சுவிர் அவர்களே, விடுமுறையில் சுவாமி விவேகானந்தரின் நூல்களை வாசித்தேன். வலிமையை உணர்த்தும் கருத்துகளையே சுவாமிஜி அதில் வலியுறுத்துகிறார்.
நாடு இப்போது விடுதலை பெற்று நமது ராணுவம் பலமாக உள்ளது. அப்படி இருந்தும் வலிமையை விவேகானந்தர் அதிகம் வலியுறுத்துவதன் நோக்கம் என்ன? - கல்லூரி மாணவன் ஆகாஷ், மேல்மருவத்தூர்
பதில்: ஆகாஷ், ஒரு நாட்டின் வலிமை என்பது ராணுவ பலம் மட்டுமல்ல. நாட்டிற்கு நல்லவற்றை நிர்ணயிக்கும் ஆட்சியாளர்கள் நேர்மையாளராக இருப்பதே நாட்டின் முக்கிய பலமாகும்.
முக்கிய பலத்தைவிட மூல பலம் ஒன்றுள்ளது. அதுதான் மனித மனோபலம். தைரியம். அதுவும் குறிப்பாக, சிக்கலான சமயத்தில் துணிச்சலான செயல்திறன். மனவலிமையால் நமக்கு மட்டுமல்ல, பிறரது வாழ்க்கைக்கும் நம்மால் உதவ முடியும்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்தோனேசியாவில் பூகம்பம் வெடித்தது. ஓர் ஆஸ்பத்திரியின் நர்சுகள் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் அப்போது பிறந்திருந்த குழந்தைகளைக் காப்பாற்றினார்கள்.
அச்சங்களுள் மிக மோசமானது மரண பயம். ஆனால் மரண பயம் வந்தபோதும் பலர் மிக தைரியத்துடன் செயல்பட்டதால் வீர புருஷர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். வீர வரலாற்றுச் சம்பவங்கள் நமது சரித்திரத்தில் பல உள்ளன. அதன் அடிப்படையில் பஹல்காம் சம்பவத்தைப் பார். அங்கு 26 இந்துக்களை இஸ்லாமிய அடிப்படைப் பயங்கரவாதிகள் சொல்லிச் சொல்லிச் சுட்டுக் கொன்றார்கள்.
ஆயுதங்களுடன் கொடூரமான எதிரிகள் நான்கே பேர். ஆயுதம் இல்லாமல் 26 பேர், கூடவே அவர்களது குடும்பத்தினரும் இருந்தார்கள். நாலுக்கு 40 பேர்.
அந்தப் பயங்கரவாதிகள் ஒவ்வொருவராகச் சுட்டுக்கொண்டே வருகிறார்கள். சாவது நிச்சயம் என்றான பிறகு துணிச்சலுடன் ஒரு ஐந்து பேராவது எதிர்ப்பைக் காட்டி அந்த முட்டாள்களிடம் மோதியிருந்தால்.....
அந்தக் கண நேரத்தில், வீரம் மிக்க பாரம்பரிய ரத்தம் தங்களுக்குள் ஓடுகிறது என்பதை ஒரு கணம் நினைத்து இருந்தால்....
அந்த மோசமான மரண பய நேரத்திலாவது தைரியம் வந்திருந்தால்.....,
ஒருவேளை அந்தப் பயங்கரவாதிகளுள் இரண்டு பேராவது வீழ்த்தப்பட்டிருக்கலாம். வீணர்களின் கைகளில் மடிந்திருப்பதைவிட வீர மரணம் பெற்றிருப்பார்கள்.
இதனால்தான் சிங்கப்பூர் நாட்டில் சட்டவிதி இருப்பது போல் நம் ஒவ்வொருவருக்கும் குறைந்த அடிப்படை ராணுவப் பயிற்சி இருக்க வேண்டும்.
நமது ராணுவத்தில் எத்தனையோ வீரர்கள் ஐந்து ஆறு தோட்டாக்கள் தங்கள் மீது பாய்ந்த போதும் அதை ஏற்றுக் கொண்டு போராடி இருக்கிறார்கள். அதன் பின் பணியில் தொடர்ந்தும் நாட்டின் சேவையில் கம்பீரமாகவும் விளங்கினார்கள்.
இந்த ஒரு கருத்தை பிரிகேடியர் சுபாஷ் ஷர்மா என்பவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார்.
ஜாலியன் வாலாபாக் படுகொலையில் சுமார் 1000 பேர் நம்மவர்கள் இருந்தார்கள். எதிரிகள் 50-க்கும் குறைவானவர்கள். ஆயிரம் பேர் துணிச்சலுடன் எதிர்த்து நின்று போராடி இருந்தால் அந்தக் கொடுமை நடந்திருக்குமா?
சுவாமி விமூர்த்தானந்தர்
28.12.2024
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்