RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

சிந்தனைச் சேவை - 16

10.03.21 07:50 PM By thanjavur

சிந்தனைச் சேவை - 16

'ஏன் பெண்கள் மட்டும் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்? பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வதால்தான் அவர்கள் சமுதாயத்தில் அடிமைப்படுத்தப்படுகிறார்கள். ஆதலால் பெண்களின் கர்ப்பப்பை நீக்கப்பட வேண்டும் என்று சில வருடங்களுக்கு முன்பு ஒரு தலைவர் கூறியதை சர்வதேச மகளிர் தினக் கூட்டத்தில் ஒரு பேச்சாளர் கூறினார்.

​பெண்ணின் கர்ப்பப்பை என்ன குப்பைச் சுமக்கும் கோணிப்பையாகவா அந்தத் தலைவர் நினைக்கிறார்?      - திருமதி கவிதா பாலாஜி, சென்னை-4.

பதில்: பெண்களின் கர்ப்பப்பையை நீக்க வேண்டும் என்று ஒரு வேகத்தில் அந்தத் தாடிக்காரர் கூறிவிட்டார். தலைவலி வந்தால் தலையை எடுத்து விடு என்று கூறுவது போல் இது இருக்கிறதல்லவா?

  

ஆணுக்கு எதிராகப் பெண்ணைத் திருப்பி, பெண்ணைத் தூண்டினால்தான் பெண் முன்னேறுவாள் என்று பல காலமாக மக்களைச் சில பகுதி நேரப் பகுத்தறிவாளர்கள் போதித்து வருகிறார்கள். இவ்வாறு கூறியதால் எத்தனை நல்ல பெண்களின் மனதில் குழப்பம் நிலவுகிறது, இன்றளவும். அதனால் எவ்வளவு பேருடைய காலம் விரயம் ஆகி வருகிறது.

  

தனது செருப்பைக்கூட பிறரிடம் ஒப்படைத்து விட்டுச் செல்ல இன்று மனிதன் தயாராக இல்லை. பெண், தன்னைத் தானே நம்பாத நிலையைப் பார்க்கிறோம்; பெண்களைப் பிறர் நம்பாத நிலையையும் பார்க்கிறோம்.

ஆனால் இறைவன் பெண்களை மிகவும் நம்புகிறான். எப்படி?

 

கர்ப்பப்பை பெண்ணுக்கு இறைவன் தந்த ஒரு பெரிய ஆசீர்வாதம். தான் படைக்கும் சிசுக்களின் வளர்ப்பை, பாதுகாப்பை இறைவன் ஓர் ஆணிடமல்ல, ஒரு பெண்ணிடமே ஒப்படைக்கிறார். இறைவனின் நம்பிக்கைக்குப் பாத்திரமான உயிர், பெண்தான் என்பது பெண் இனத்திற்கே பெருமை.

 

மகாபாரதத்தில் யக்ஷன், தர்மராஜரிடம் கேட்ட கேள்விகளில் ஒன்று: பூமியைவிடக் கனமானது எது?

 

அதற்கு தர்மராஜர் அளித்த பதிலைப் ப. நே. பகுத்தறிவாளர்கள், ஹிந்துக் கடவுளை மட்டுமே மறுப்பாளர்கள் படித்திருந்தால் இது போன்ற இலவச ஆலோசனையைக் கூறியிருக்க மாட்டார்கள்.

 

'பூமியைவிடக் கனமானது மக்களைத் தாங்கும் தாய், அதாவது தாயின் கருவறை' என்றார் தர்மராஜர்.

 

மனிதன் பிறந்த பின்பே பூமி அவனைத் தாங்குகிறது. பிறக்கும் முன் சிசு கருவாகப் பூமியில் விடப்பட்டால் அது இறந்துவிடும். அந்த நிலையிலுள்ள சிசுவைத் தாய் பேணுகிறாள். அனைத்துயிரும் தாயின் கர்ப்பத்திலிருந்தே பூமிக்கு வருகின்றன. ஆகவே தாய் பூமியைவிட மதிப்பில் உயர்ந்த கனமானவள்.

 

ஆஹா, ஓர் உடலில் இரண்டு உயிர்கள். கருவறையில்தான் மனிதன் தனது ஆரம்பக்கல்வியைத் தொடங்குகிறான். அந்தக் கல்வியைத் தாய் மூலமாக இறைவனே வழங்குகிறார்.

 

ஆட்டிஸம் என்ற மூளை வளர்ச்சிக் குறைபாட்டிற்கான மூல காரணம் எது தெரியுமா?

 

பார்த்தல், கேட்டல் என உணரும் விஷயங்களை மூளை சரியாகப் பயன்படுத்த முடியாமல் குழந்தைகளின் நடவடிக்கைகள் மாறிப் போவதுதான் ஆட்டிஸம் எனப்படும். 

கர்ப்பத்தில் சிசு இருக்கும்போது தாய் மகிழ்ச்சியாக இல்லாமல், மன அழுத்தத்துடன் இருந்து பிறருடன் நன்றாகப் பழகாதபோது அது குழந்தையைப் பாதிக்கிறது. அந்தப் பாதிப்புதான் ஆட்டிஸத்தின் அடிவேர்களுள் முக்கியமானது.

        

கர்ப்பம் தரித்த பெண்களுக்கு நமது சாஸ்திரங்கள் பல நெறிமுறைகளைக் கற்றுத் தருகிறது. அதன்மூலம் கருவில் திருவுற்றவர்கள் பலர்.

        

அப்படிப்பட்ட கர்ப்பப்பையையா அகற்றுவது? இப்படிப்பட்ட சிறுபிள்ளைத்தனமான யோசனை சொன்னவர்களின் தாய்மார்கள் மக்கட்செல்வம் இல்லாத வறியவர்களாக இருந்திருந்தால், தமிழகத்தின் ஆன்மீக மகிமையை உலகம் இன்னும் அதிகமாக  அறிந்திருக்கும்.

சுவாமி விமூர்த்தானந்தர்

10 மார்ச், 2021

ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

thanjavur