தேவியின் வசமாகு; தேவி உனக்குக் கவசமாவாள்!_copy

07.02.26 04:42 PM - By thanjavur

அமுதசுரபி பிப்ரவரி 2026 இதழில் "அன்புத்தவம்" என்ற தலைப்பில் சுவாமி விமூர்த்தானந்தர் எழுதிய கட்டுரை வெளிவந்துள்ளது. 

An article titled “Anbuthavam” written by Swami Vimurtananda has been published in the February 2026 issue of Amudha Surabhi.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் தெய்வீக வரலாற்றில் நடைபெற்ற ஒவ்வொரு சிறு சம்பவமும் அற்புதமான விளக்கம் வழங்குபவை. யோகத்தில் நிலைத்து நின்று எண்ணற்ற அருளாளர்கள் பலவிதமான யோகங்களை நமக்குக் கற்றுத் தந்திருக்கிறார்கள்.

 

அவற்றுள் மிக வித்தியாசமான ஒரு யோகமும் உள்ளது. அதுதான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் காட்டிக் கொடுத்த புறக்கணிப்பு யோகம்.

 

இந்தப் புறக்கணிப்பு யோகத்தை சாதாரண சீடர்களிடம் காட்ட முடியாத அல்லவா? அதனால் அன்று ஸ்ரீ ராமகிருஷ்ணர் அந்த யோகத்தை உலகிற்குக் காட்ட நரேனைத் தேர்ந்தெடுத்தார் போலும்.

 

ஸ்ரீராமகிருஷ்ணரின் அன்பு எனும் ஊற்று அன்று பிரவாகமெடுத்தது. இறைவனை நேசித்த அவரது இதயம் இறைவனின் குழந்தைகளான உலக மக்களையும் நேசித்தது.

 

"இறைவனை அன்பு செய்தல்தான் மனிதன் செய்ய வேண்டிய ஒரே கடமை. அன்பு, அன்பு, அன்பு மட்டும்தான் வாழ்க்கையின் சாரம்." ஸ்ரீராமகிருஷ்ணர் கூறிய இந்த உபதேசமே அவரது வாழ்க்கை அல்லவா! அன்பு ஆழமானது. அன்பில்தான் அகிலத்திற்கு உயிர் பிறக்கிறது. உலக மொழிகளின் உயிர் எழுத்து அன்புதானே!

 

மேற்கு வங்காளத்தில் உள்ள தவ பூமி தக்ஷிணேஸ்வரம். அங்கு பவதாரிணிதேவி கோவிலில் தமது அறையில் ஸ்ரீராமகிருஷ்ணர் பக்தர்கள் மற்றும் சீடர்களுடன் வீற்றிருந்தார். அவரது அருகிலேயே நரேன் பிரசன்னமாக அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

 

"என் அன்புச் சீடர்களே! என்றைக்கு நான் உங்களிடத்தில் இறைவனைக் காணவில்லையோ, அன்றைக்கு உங்களை என்னால் பார்க்க இயலாது" என்று ஸ்ரீராமகிருஷ்ணர் கூறியதைக் கேட்டு சில நெஞ்சங்கள் நடுங்கின.

 

இன்று பரமஹம்சருக்கு என்ன வந்தது! யாரைக் கண்டால் தாயைக் கண்ட கன்று போல் அவரது நெஞ்சு துள்ளுமோ, அந்த நரேனைக் கண்டு இன்று ஏன் இந்தப் பாராமுகம்! குருதேவர் நரேனைக் கடிந்து கொள்ள முடியுமா? அந்தச் சக்திதான் அவருக்கு இருக்கிறதா? இன்று ஏன் இவர் இப்படி நரேனைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்? என்று சீடர்கள் வியந்தார்கள்.

 

பக்தர்கள் தாங்கள் புரிந்து கொண்ட எதை எதையோ தங்களுக்குள் முனகிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்தர் இன்னொருவரிடம், "நரேன் குருதேவரை வணங்கச் சென்றால் அவர் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார், பார்த்தாயா?" என்று முணுமுணுத்தார்.

 

"ஆம்,நரேனைப் பார்க்க முடியாவிட்டால் வீட்டுக்கு ஆளை அனுப்பியாவது அவரைப் பார்த்தவர் இன்று ஏன் இப்படி இறுக்கமாக இருக்கிறார்?"

 

இவ்வாறு பலரும் வந்த வேலையை விட்டுவிட்டுப் பிறரைப் பற்றி அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார்கள்.

 

ஆனால் நரேனோ கன்றுகளின் நடுவில் காளையாக நின்றார். குருதேவர் தன்னைப் பார்க்கவில்லை, தன்னிடம் பேசவில்லை, நலம் விசாரிக்கவில்லை, பிரசாதம் தரவில்லை - இவையெல்லாம் இன்று மட்டுமல்ல. கடந்த ஒரு மாதமாக இப்படியே தொடர்கிறது.

 

ஆனாலும் நரேன் தினமும் தொடர்ந்து வருகிறார். குருதேவரை வணங்குகிறார். அவர் சொல்வதைக் கவனித்துக் கேட்கிறார். தன்னிடம் பேசாததைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. பிறரிடம் கூறிக் குறைபட்டுக் கொள்ளவில்லை.

 

'என் அருமை இவருக்கு என்ன தெரியும்? என்னை ஒதுக்கிய இவரைப் பார்க்க இனி நான் இங்கு வர மாட்டேன்' என்று அசட்டுத்தனமாக எதுவும் செய்யவில்லை.

 

தன்னைக் காண வந்தவர்கள் தன்னைப் பற்றியும் தன் பக்தன் பற்றியும் கூறுவதை பகவான் அறியாமலா இருப்பார்! அனைத்தையும் அவதானிக்கும் அவர் நரேனின் செய்கை கண்டு சிலிர்த்து நின்றார்.

 

இது குருவுக்கும் சீடனுக்குமான ஓர் ஆன்மீகப் பரீட்சை, அன்புப் போட்டி. 'நான் புறக்கணிப்பேன்; நீ என்ன செய்வாய் என்று பார்க்கிறேன்' என்பது குருவின் நிலைப்பாடு.

 

‘சுவாமி, உங்களைப் பற்றி நான் கணித்ததை, கண்டறிந்ததை நீங்களே என்னைப் புறக்கணித்தாலும் நான் மாற்றிக் கொள்ளவே மாட்டேன். ஏனென்றால் உலகில் நேசிக்கத்தக்கவர் நீங்கள் ஒருவரே என்பது என் நிச்சய புத்தி' - இது சீடனின் திட விசுவாசம்.

 

ஒரு வாரம் ஆனது; நரேனும் ஒவ்வொரு நாளும் ஸ்ரீராமகிருஷ்ணரைத் தரிசித்தார் பிரசன்னமாக. இரண்டு வாரம் ஆனது. குருதேவர் பற்றி இரண்டாவது கருத்து நரேனுக்கு வரவே இல்லை. முன்பை விட இப்போது குருதேவரை நரேன் அதிகம் நேசிக்கிறார்.

 

முடிவில் நான்காம் வாரத்தில், ஸ்ரீராமகிருஷ்ணர் தமது வெற்றி வாய்ப்பை இழந்தாரோ! ஆம், அன்று அவர் நரேனுக்காகக் காத்திருந்தார். நரேன் வந்தார். ஸ்ரீராமகிருஷ்ணரை வணங்கினார், வென்றார்.

 

ஸ்ரீராமகிருஷ்ணர் இடது கையில் அவரது வலது கையை ஏந்தி, தமது வலது கையால் நரேனின் முகவாயைத் தொட்டு, "நரேன், நான் உன்னிடம் ஒரு மாத காலமாக எதுவும் பேசவில்லையே? நான் அவ்வாறு செய்ததால் உனக்கு ஏமாற்றமோ, வருத்தமோ இல்லையா?" என்று கேட்டார் அவரது தலையைக் கோதிக் கொண்டே.

 

ஸ்ரீராமகிருஷ்ணரின் புறக்கணிப்பை அப்போதுதான் புரிந்து கொண்டவர் போல் நரேன் கைகூப்பி, "ஐயா, என்னால் எப்படி உங்கள் மீது வருத்தப்பட முடியும்? நான் உங்களை நேசிக்கிறேன். அதற்காக நீங்கள் என்னிடம் பேச வேண்டும், பார்க்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லையே?" என்று கேட்டார்.

 

வெப்பம் வழங்கி மலர்விக்கும் சூரியனுக்குப் பூக்கள் நன்றி தெரிவிக்கிறதா? அதற்காக சூரியன் ஒளியை மறைத்துக் கொள்கிறதா? அதுபோல் நரேன் ஞானசூரியனாக மலர்ந்துள்ளதை பரமஹம்ச மலர் பார்த்து வியந்து நின்றது.

 

‘தொட்டாற்சிணுங்கி போன்ற உலகமே, இதை உடனடியாக கற்றுக்கொள்' என்று கூறவும் செய்தது.

 

அன்பை வெளிப்படுத்தாத போதும் அன்பின் ஆழத்தைப் புரிந்து கொண்ட சீடனைக் கண்டு எந்த குருதான் சிலிர்க்க மாட்டார்?

 

"நரேன், உன்னை நான் சில காலம் கண்டுகொள்ளவில்லை. நீ எவ்வளவு ஆழமாக என்னை நேசிக்கிறாய் என்பதையும் பிறர் புரிந்து கொள்ளவே புறக்கணித்தேன். இதுவும் ஒரு யோகம்தான், புறக்கணிப்பு யோகம்."

 

"நரேன், உன்னைப் போன்ற ஆன்மீகச் சிம்மம்தான் இது போன்ற புறக்கணிப்பைப் பொறுத்துக் கொள்ள முடியும். இப்படிப்பட்ட உன் மாறாத நிஷ்டைதான் உனக்கு இறைவனைக் காட்டித் தரும்" என்று குருதேவர் அவரை ஆசீர்வதித்தார்.

 

மனிதகுலமே! ஒரு கணம் இந்தச் சம்பவத்தை நெஞ்சில் ஏற்று. ஒரு சொல், முறைப்பான ஒரு பார்வை, ஒரு புறக்கணிப்பு போதுமே மக்களை நம்பிக்கை இழக்கச் செய்ய! விமர்சிக்க! ஓடி ஒதுங்க! ஒரேடியாக ஒதுக்க!

 

பரமஹம்சரின் பாராமுகத்திலும் பரம கருணையைக் கண்ட நரேன் என்ற சுவாமி விவேகானந்தரின் நெஞ்சுருதி நானிலம் கற்க வேண்டியது. அன்பு கிட்டாத போதும் மனம் தளராத நம்பிக்கை நரேனுடையது. அது மட்டுமா அவருடையது? நடுப்பகல் சூரியனாக எரித்த போதும் நரேன் நடுங்காமல் நின்றார்.

 

அடுத்து, பரமஹம்சர் சீடன் மீது முழு நிலவாகக் கருணையைப் பொழிந்த போதும் நிமிர்ந்து நின்றது நரேனின் நெஞ்சம். ஆஹா, எத்தனை பேருக்கு இத்தனை சுகமான வாய்ப்பு கிடைக்கும்! எத்தனை பேருக்குக் கிடைத்தாலும் யார்தான் நரேன் போல் நெஞ்சுரம் காட்ட முடியும்!

 

ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு நாள், "நரேன், அன்னை பவதாரிணியின் அருளால் அஷ்டமா சித்திகளும் எனக்குக் கிடைத்துள்ளன. அவற்றை நான் உனக்கு வழங்கப் போகிறேன். சம்மதமா?" என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.

 

ஸ்ரீராமகிருஷ்ணர் வழங்க இருந்த தெய்வீகச் சித்திகளுள் சிறிய ஒன்று கிடைத்தால்கூட இந்த உலகில் எவரையும் பெயர், புகழ், பொருளில் திளைக்க வைத்து விடும். அப்படிப்பட்ட ஒரு திவலை சித்தி பெறுவதற்காக, பெற்று சுகபோகங்களில் மிதப்பதற்காக ஜன்ம ஜன்மாந்தரமாக ஜப தியானங்கள் செய்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

 

ஆனால் இந்தத் தேர்விலும் நரேன் நிமிர்ந்து நிற்கிறார். ஆழமாகச் சிந்திக்கிறார். அதைப் பார்த்து ஸ்ரீராமகிருஷ்ணர், "என்ன நரேன், உனக்கு சித்திகள் தரட்டுமா?" என்று குருதேவர் அவரைக் கண்டார் அருள் நோக்குடன்.

 

நரேனோ குருவின் கண்களைக் கண்டு, "குருவே, இந்தச் சித்திகள் எனக்கு இறைதரிசனத்தைக் காட்டுமா?" என்று கேட்டார்.

 

ஸ்ரீராமகிருஷ்ணர் மெல்ல, "சித்திகள் தெய்வ தரிசனத்தைக் காட்டாது. ஆனால் நீ தெய்வத்தைத் தரிசித்த பிறகு தெய்வக் காரியங்கள் ஆற்றும்போது இந்தச் சித்திகள் உனக்கு அவசியம் தேவைப்படும்" என்றார்.

 

சரி கொடுங்கள் என்று சொல்ல நரேன் என்ன மானுடனா? சப்தரிஷிகளுள் ஒருவராயிற்றே!

 

"....அப்படி என்றால் முதலில் நான் இறைதரிசனத்திற்காகப் பாடுபடுகிறேன். அதற்கு முன் இந்த சித்திகள் என்னிடத்தில் வந்தால் நான் இறைவனையும் இறைலட்சியத்தையும் மறந்துவிட வாய்ப்பு இருக்கிறதல்லவா?" என்று கேட்டார். விவேக விசாரணையை ஆனந்தமாகச் செய்யும் விவேகானந்தர் இவ்வாறு கேட்டதில் ஆச்சரியம் என்ன!

 

குழந்தையின் மழலைச் சொல்லில் மாநிலத்தையே மறக்கும் மாதாவாக ஸ்ரீராமகிருஷ்ணர் நரேனைக் கட்டியணைத்துக் கொண்டார். அன்புப் பொழிவிலும் அன்பு வறட்சியிலும் தன் அன்பனாகவே நின்ற நரேனைக் கண்டு மெய்சிலிர்த்தார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

 

பரமஹம்சரின் பாராமுகத்திலும் சரி, அருள் முகத்திலும் சரி, அதே பரம கருணையைத் தரிசித்த நரேன் சுவாமி விவேகானந்தர் ஆனது அதிசயம் அல்லவா? அந்த ஆன்மீக அதிசயத்தைக் கண்டு ஸ்ரீராமகிருஷ்ணரும் நரேனும் அடுத்த பயிற்சிக்காகத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டார்கள்.... தவம் என்ற பெயரில்.


thanjavur