RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

ஸ்ரீராமகிருஷ்ணர் - நித்திய கல்பதரு

31.12.20 09:32 PM By thanjavur

கல்பதரு தினம்

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆசி- அதன் சிறப்பு என்ன? அது நமக்கு வழங்கும் மேலான நிலை என்ன?

ஜனவரி 1, ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் நம்முள் பலரும் வாழ்த்துகளை 'சோஷியல் மீடியா' மூலமாகப் பரிமாறிக் கொள்வர். இப்படிப்பட்ட வாழ்த்துகளில் பொதுவாக 99% ஃபார்வேர்ட் செய்யப்படுவதுதான், அதுவும் எந்திர கதியில். 

அவை போன்ற வாழ்த்துகளில் அவசரம் இருக்கும். உணர்வு இருக்குமா? நமது வாழ்த்துகளுக்கு சக்தி இருக்குமா என்பது கேள்விக்குறியே. அதோடு, அந்த வாழ்த்துகளில் எத்தனை, நமக்கு உண்மையில் உதவும் என்பதும் சந்தேகமே? இன்று இவை எல்லாம் ஒரு சமுதாயச் சடங்காகி மாறி வருகிறது.

ஆனால் ஸ்ரீராமகிருஷ்ண பக்தர்களோ ஜனவரி 1-ல் குருதேவரின் கருணையில் உணர்வு ரீதியாக உயர்நிலையில் திளைப்பார்கள். காரணம் என்னவென்றால்,  பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் அந்தத் தினத்தில்தான் தான் ஒரு தொடர் கல்பதரு என்பதை நிரூபித்துக் காட்டினார். 

குருதேவரின் ஆசியைப் பெறத்தான் அல்லது சிறிதளவாவது பெற்றுள்ளதால் தான் ஸ்ரீராமகிருஷ்ண பக்தர்கள் ஜனவரி 1 - இல் ஆனந்தத்தில் திளைக்கிறார்கள்.

சரி, கடவுள் எவ்வாறு கல்பதரு ஆகிறார்? 

திரேதா யுகத்தில் ஸ்ரீராமர் என்ற கல்பதரு

இறைவன் ராமாவதாரத்திலும் கிருஷ்ணாவதாரத்திலும் தோன்றி எண்ணற்ற பக்தர்களுக்கு அபயம் அளித்தான்.

உலகியலிலும், உடல் இச்சையிலும் மூழ்கியிருந்து பிறகு ஸ்ரீராமரின் அருள் பெற்றவர் துளசிதாசர். அப்படிப்பட்டவர் ஸ்ரீமத்  ராமாயணத்தையே ஒரு கல்பதரு என்கிறார். 

பணப்பிரச்னை, திருமணம் தடைப்படுதல், குடும்ப அங்கத்தினர்களிடையே ஏற்படும் ego clash- அகங்காரப் பிரச்னைகள் என்று பலவற்றுக்கும் ராமாயண பாராயணமே சிறந்த தீர்வு தரும் என்கிறார்.

ஒரு காவியமே கல்பதருவாக இருந்து நல்லவற்றையும், பயனுடையதையும் நமக்கு வழங்கினால், அதன் காவிய நாயகன் ஸ்ரீராமர் எப்படிப்பட்டவராக இருப்பார்! 

ஸ்ரீராம, ராவண யுத்தம் நடக்கப் போகிறது. ராவணனின் தம்பியான விபீஷணன் தனது நான்கு அமைச்சர்களுடன் ஸ்ரீராமரைச் சரணடைய வந்து நின்றான். அப்போது சுக்ரீவன் முதலானோர் விபீஷணனைப் பற்றி ‘அவன் நம் எதிரியான ராவணனின் உளவாளியாகத் தோன்றுகிறது. இவனை நம்மோடு சேர்த்துக் கொள்ளக் கூடாது’ என்று குறை கூறி ஒதுக்க முயன்றனர்.

ஸ்ரீராமர் அனைவரையும் பேச அனுமதித்தார். அவர்கள் கூறியதை எல்லாம் கவனமாகக் கேட்டுவிட்டு, தலைமைப் பண்புமிக்க அவர் மிகக் கருணையுடன் கம்பீரமாகக் கூறினார்:

‘ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே அபயம் ஸர்வ பூதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம் மம’

"யார் ஒருவன், 'ராமா! நான் உன் தாசன்; நான் உனது உடைமை. என்னைக் காப்பது உன் பொறுப்பு’ என்று கூறி என்னிடம் அடைக்கலம் புகுகிறானோ, அவனை எல்லா உயிர்களிடமிருந்தும் காப்பது என் விரதம்".

இது ராமாயண சரம சுலோகம். ‘சரணடைந்தவர்களைக் காப்பது என் விரதம்’ என்றபோது ஸ்ரீராமர் கல்பதருவாகவே விளங்கினார். அணில், அரக்கர், வானரங்கள், மனிதர், ரிஷிகள் என்று பக்தியுடன் சரணடைந்த எல்லோருக்கும் அவர் அடைக்கலம் அளித்தார்.

துவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் என்ற கல்பதரு

ஸ்ரீகிருஷ்ணர் கீதோபதேசத்தில் கர்ம, ஞான, பக்தி யோகங்களை விரிவாக உபதேசித்தார்.  கடைசியில் ‘சரணாகதி’ எனும் எளிய வழியைக் கல்பதருவாகக் கருணையுடன் காட்டினார்.

'ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ!

அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச!! '

-‘பக்தனே, நீயாகப் புரிந்து கொண்டுள்ள எல்லா அறங்களையும் விட்டுவிட்டு என்னை மட்டுமே சரணடை. நான் எல்லாப் பாவங்களிலிருந்தும் உன்னை விடுவிப்பேன். பயப்படாதே’. இது கீதையின் சரம ஸ்லோகம். 

இதன் சாரம்: ‘மார்க்கங்களைக் கடந்து மாதவனைப் பற்று’ என்பதாகும்.

வைணவ ஆசார்யர்கள், இச்சுலோகத்தின் அஹம்,  மாம் என்ற இரண்டு வார்த்தைகளுக்குச் சிறப்பாகப் பொருள் கூறுவர். உலகத்தையும் மக்களையும் ரக்ஷிப்பவனுக்கு இருக்க வேண்டிய முக்கிய குணங்களான மேன்மையையும் கருணையையும் அஹம், மாம் என்ற இரு பதங்களும் காட்டுகின்றன.

‘கிருஷ்ணனாகிய நான் ஞானம், சக்தி ஆகிய இரண்டு குணங்களை உடையவன்’ என்பதை அஹம் என்ற பதம் காட்டுகிறது. அவரது ஞானமானது நம் அறியாமையை வேரோடு நீக்கும்; சக்தியானது நமது எல்லாப் பாவங்களையும் போக்கும்.

மாம் என்ற பதம் கிருஷ்ணருடைய சௌலப்யம், வாத்ஸல்யம், ஸ்வாமித்வம், ஸௌசீல்யம் ஆகிய குணங்களைக் குறிக்கிறது. தான் விரும்புபவர்களிடம் உள்ள குறைகளை அன்பால் மறைக்கும் தன்மையை உடையது வாத்ஸல்யம். 

தாய் தன் குழந்தையிடம் காட்டும் அளவற்ற அன்பு வாத்ஸல்யம். பசு கன்றை ஈன்றதும், அதன் மீதிருக்கும் துர்நாற்றமடிக்கும் கழிவான வழும்பைத் தன் நாக்கால் நீக்கிக் கன்றைச் சுத்தப்படுத்தும்.

நம்மிடம் பாவம், பொறாமை, கோபம், மோகம், பேராசை, அகங்காரம் என்று கணக்கற்ற குறைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு குன்றளவு இருந்தாலும் அவற்றில் பகவான் தன் பார்வையைச் செலுத்த மாட்டானாம். அப்படியே செலுத்தினாலும், ‘என் பக்தனது தவறுதானே, பரவாயில்லை’ என்று கூறி அவற்றையெல்லாம் குணமாகக் கொள்வானாம்.

ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ரநாமத்தில் ‘அவிஜ்ஞாதா’ (குறைகளை அறியாதவன்), ‘ஸஹஸ்ராம்ஸு’ (அனைத்தும் அறிந்தவன்) என்று இரண்டு திருநாமங்கள் பகவானுக்கு உள்ளன.

அனைத்தும் அறிந்த இறைவன், குறைகளை அறியாதவனாக ஆக முடியுமா? தன்னைச் சரணடைந்தோரின் குறைகளை அறிந்தும், அதைக் கருத்தில் கொள்ளாது, தன் வாத்ஸல்யத்தால் அவற்றைக் குணமாகக் கொள்கிறான் என்பதையே இது காட்டுகிறது. இதனால்தான் ‘குன்றனைய குற்றம் செய்யினும் குணமாகக் கொள்ளும்’ என்று பொய்கையாழ்வார் பாடினார்.

இப்படி அவதாரங்கள் அபயமளிக்கும் வாக்குறுதிகளை அருளியிருந்தாலும், தற்கால மனிதன் சென்றதையே எண்ணிச் சோகம் பிடித்துத் திரிகிறான். இருக்கும் சொர்க்கத்தை நழுவ விட்டுவிட்டு இவனாகவே நரகத்தை உருவாக்கிக் கொள்கிறான்.

ஜென் குரு ஒருவர் வாழத் தெரியாத மனிதர்களின் நிலை  பற்றிக் கூறுகையில், ‘எப்போதும் யாரிடமாவது தனது குறைகளைக் கூறி அழுவதில் பெரும் திருப்தி காண்பவன் மனிதன்’ என்கிறார். தான் அழுவதைப் பிறர் கேட்க அவன் பணம்கூடத் தருவானாம். பலர் மனோதத்துவ நிபுணர்களிடம் செல்வது இது போலத்தானோ?

மகாகவி பாரதியார் இப்படிப்பட்ட மனிதர்களைத்தான் பாவி என்று அழைக்கிறார். 'எப்பொழுதும் கவலையிலே இணங்கி நிற்பான் பாவி' என்று சரியாக வரையறுக்கிறார்.

சம்சார பந்தம், பலவீனம், சோகம், மோகம் என்று ஏதோ சில பிரச்னைகள் எல்லோரிடமும் இருக்கத்தான் செய்யும். இவற்றை எதிர்கொள்ள, நிரந்தரத் தீர்வு தர முடியாத வேறொரு சாதாரண மனிதனிடம் செல்வது சரியான பயனளிக்குமா?

மாறாக, அருளாளர்களிடம் மற்றும் அவதாரபுருஷர்களிடம் பக்தி கொண்டால் அவர்கள் நம் சோகங்களை மட்டுமன்றி, அவற்றின் மூல காரணங்களையும் நீக்கி நம்மை உயர் வாழ்க்கை வாழ வைக்கின்றனர். இந்த நோக்குடன் நாம் கல்பதரு தினத்தைக் கொண்டாடுவோம்.

கலியுகத்தில் ஸ்ரீராமகிருஷ்ணர் என்ற கல்பதரு

ஸ்ரீராமர் மற்றும் ஸ்ரீகிருஷ்ணரே ஸ்ரீராமகிருஷ்ணராக அவதரித்து மேன்மை மற்றும் கருணையுடன் நமக்கு அபயமளிக்கிறார்கள்.

கல்பதரு தன்னிடம் வந்து யாசிப்பவனுக்கு அவன் கேட்பது எதுவாயினும் தந்துவிடும்; அது கேட்டவனுக்கு நன்மை தருமா, தீமை தருமா என ஆராய்வதில்லை. 

ஸ்ரீ ராமகிருஷ்ணரே  கூறிய கதை ஒன்று உண்டு.

கல்பதரு என்று தெரியாமலேயே அதனடியில் சென்று ஒருவன் படுத்தான். அவனுக்குப் பசித்தது. உடனே அறுசுவை உணவு வந்தது. மெல்ல தூக்கம் வந்தது. வேகமாக படுக்கை வந்தது. உடம்பு பிடித்துவிட இளம் பெண்கள் வந்தால்…, ஓடோடி வந்தனர்.

'அட, நினைத்ததெல்லாம் நடக்கிறது. இது காடு ஆயிற்றே, ஒருவேளை புலி வந்தால்….,' வந்தது புலி, அவன் காலி.

ஆனால் கலியுக கல்பதருவான குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணரோ, நமக்கு நன்மை தரக்கூடியதை மட்டுமே அருள்வார். நமக்கு எது நல்லது, எது நீடித்த பலனைத் தருவது என்பது நம்மைவிட ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கே ஆழமாகவும் அருமையாகவும் தெரியும்.

ஆண்டவனை ‘அர்தி கல்பன்’ என்பர் வைணவப் பெரியோர். ‘வேண்டுபவனுக்கு (அர்தி) வேண்டுவதைத் தரும் கல்பதரு’ என்பது இதன் நேர்ப்பொருள்.

இதைவிட ஓர் உயர்ந்த பொருளையும் பெரியோர் காட்டியுள்ளனர். ‘அர்தி ச அசௌ கல்பச் ச’ என்று பிரித்துக் காட்டி, அதை விளக்கியும் உள்ளனர்.

அதாவது, இறைவன் கல்பதரு போல தன்னிடம் வருபவனுக்கு மட்டும் வழங்குவதில்லையாம். தானே பக்தர்களிடம் சென்று ‘வேண்டுபவை அனைத்தும் தரும் என்னிடம் யாசியுங்கள்’ என்று தன்னிடம் அவர்களை வரவழைக்கிறான். அர்திகளுக்கு (கேட்பவர்களுக்கு) வழங்க, இறைவன் அர்தியாகவும்  கல்பதருவாகவும் தானே ஆகிறான். தன்னிடம் வந்து உயர்கதியைப் பெற மனிதனுக்கு விருப்பத்தையும் நம்பிக்கையையும் தருகிறான்.

இதனால்தான் நம்மாழ்வார் ‘எனக்கே தன்னைத் தந்த கற்பகம்’ என்கிறார்.

ஸ்ரீராமகிருஷ்ணர் என்ற ‘அர்தி கல்பன்’ 1.1.1886 அன்று தம்மைத் தாமே வெளிப்படுத்திக் கொண்டு பக்தர்களுக்கு அபயம் தந்ததால் அவரை கல்பதரு என்கிறோம்.

ஆஹா, அந்த நிகழ்ச்சிதான் எவ்வளவு அற்புதமானது!

மேற்கு வங்காளத்தில் உள்ள காசிப்பூர் தோட்ட வீட்டில் தொண்டைப் புண் சிகிச்சைக்காகத் தங்கியிருந்த ஸ்ரீராமகிருஷ்ணர் அன்று  உற்சாகத்துடன் இருந்தார். பிற்பகல் 3 மணி. தோட்டத்தில் சற்று உலாவி வர வெளியே வந்தார். நீண்ட நாட்களாக வெளியே வராதவர் அப்படி வந்ததும், ஆங்காங்கிருந்த பக்தர்கள் ஓடி வந்து அவரைச் சூழ்ந்து கொண்டு வணங்கினர்.

பிரபல நாடக ஆசிரியரான கிரீஷ்பாபுவைப் பார்த்து ஸ்ரீராமகிருஷ்ணர், "ஆமாம் கிரீஷ் , நீ என்னைப் பற்றி எல்லோரிடமும் 'நான் ஓர் அவதார புருஷர்' என்றெல்லாம் கூறி வருகிறாயே, அப்படி என்ன அதிசயத்தை என்னிடம் கண்டுவிட்டாய்?" என்று கேட்டார்.

கிஷ்ரீபாபு பல பாவங்களைச் செய்து பகவானிடம் அடைக்கலம் புகுந்தவர். அப்படிப்பட்ட கிரீஷ்பாபு குருதேவரின் திருமுன்பு மண்டியிட்டுக் கரம் கூப்பி, "டாகுர், நான் என்ன கூறுவேன்? வால்மீகியும் வியாசருமே யாருடைய பெருமையைக் கூற வார்த்தைகள் அற்றுப் போனார்களோ, அப்படிப்பட்டவரைப் பற்றி நான் என்ன கூற முடியும்?" என்றார்.

மிகுந்த உணர்ச்சியுடன் கூறப்பட்ட இந்த வார்த்தைகளைக் கேட்டதும் குருதேவர், "நான் இன்னும் கூற என்ன உள்ளது? உங்கள் எல்லோரையும் ஆசீர்வதிக்கிறேன்; நீங்கள் எல்லோரும் ஆன்மிக விழிப்பு பெறுங்கள்" என்று ஆசீர்வதித்தார்.

பரவச நிலையில் இருந்தவாறு ஸ்ரீராமகிருஷ்ணர் அருளிய இந்தப் புனிதமான வார்த்தைகளைக் கேட்டு, பக்தர்கள் ஆனந்தப் பெருக்குடன் உணர்ச்சி மேலிட்டவர்களாய் அவர் முன் வீழ்ந்து வணங்கினார்கள்; ஒவ்வொருவரையும் குருதேவர் தொட்டு ஆசீர்வதித்தார். 

குருதேவரது தெய்வீக ஸ்பரிசத்தால் அன்று பக்தர்களின் மனங்களிலிருந்த குழப்பங்கள் நீங்கின. சிலருக்குத் தங்களின் இஷ்டதெய்வ தரிசனங்கள் கிடைத்தன. இறைவன் மட்டுமே சத்தியம் என்று ஒவ்வொருவருக்கும் பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. இனி எதைச் செய்தாலும் இறைவனோடு இணங்கி இருந்தே செய்வது என்று அவர்கள் நிச்சய புத்தி பெற்றனர்.

                        மங்கல வாக்கியம் அல்ல, மந்திர வாக்கியம்

130 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் ஒவ்வொரு புத்தாண்டிலும் கோடிக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீராமகிருஷ்ணர் என்ற கல்பதருவை தியானித்துப் புது நம்பிக்கை பெறுகிறார்கள். 

இவ்வளவு பக்தர்கள் குறிப்பாக, இன்றைய தினத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் ஈர்க்கப்படுவதற்குக் காரணம் என்ன? 

'நீங்கள் தெய்வீக நிலையைப் பெறுங்கள்' என்று ஸ்ரீராமகிருஷ்ணர் எப்படிப்பட்ட உயர்ந்த ஆன்மீக நிலையிலிருந்து உரைத்தார்?

ஸ்ரீராமனாக விபீஷண சரணாகதியின்போதும், ஸ்ரீகிருஷ்ணனாக அர்ஜுனனிடம் ‘மாம் ஏகம் சரணம் வ்ரஜ’ என்ற உபதேசம் செய்தபோதும் இருந்தது போன்ற ஆன்மிகப் பெருநிலையில் நிலைத்திருந்துதான் ஸ்ரீராமகிருஷ்ணர் ‘ஆன்மிக விழிப்பு பெறுங்கள்’ என அன்று ஆசீர்வதித்தார்! 

ஸ்ரீராமரைப் பற்றி எழுதிய வால்மீகி பற்றியும், ஸ்ரீகிருஷ்ணரின் லீலைகளைத் தொகுத்த வியாசரைப் பற்றியும் கிரீஷ் பாபு கூறியதும் ஸ்ரீராமகிருஷ்ணர் பரவசநிலை அடைந்தார். 

'யார் ஸ்ரீராமராகவும் ஸ்ரீகிருஷ்ண ராகவும் அவதரித்தாரோ, அவரே இப்போது ராமகிருஷ்ணராக வந்திருக்கிறார்' என்று ஸ்ரீராமகிருஷ்ணரே கூறியுள்ளார். 

அந்த அவதார நினைவூட்டலைத்  தூண்டும் வகையில் கிரீஷ் பாபுவின் பக்தி அமைந்திருந்தது. அதனால்தான் ஸ்ரீராமகிருஷ்ணர் முந்தைய அவதாரத்தில் எவ்வாறு கல்பதருவாக விளங்கி அருளாசி வழங்கினாரோ, அவ்வாறே ராமகிருஷ்ண அவதாரத்திலும் கல்பதருவாக மாறி அருள்புரிந்தாரோ!

குருதேவர் கல்பதரு ஆசியாக அன்று கூறியது, பக்தர்களின் நன்மைக்கான மங்கள வாக்கியம் மட்டுமல்ல, அது உலகம் முழுவதிலும் உள்ள எல்லா சமயத்தின் பக்தர்கள் அனைவரும் நினைந்து நினைந்து உருக வேண்டிய மந்திர வாக்கியமும் ஆகும்.

நீங்கள் நன்றாக இருங்கள், பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழுங்கள், வாழ்க வளமுடன் என்றெல்லாம் பலரும் உங்களையும் வாழ்த்தி இருப்பார்கள். அந்த வாழ்த்துச் செய்திகள் எல்லாம் உங்களுக்கு நன்கு புரிகின்றன.

ஆனால் 'நீங்கள் ஆன்மீக விழிப்புணர்வு பெறுங்கள்' என்ற ஆசீர்வாதத்தைப் பெற்றால் என்ன பலன் கிடைக்கும் என்ற கேள்வி பலருக்கும் வருகிறது. குருதேவரின் இந்த ஆசீர்வாதத்தை அனுபவத்தில் புரிந்து கொண்டாலோ அல்லது உணர்வுரீதியான அனுபவம் பெற்றாலோ, குறைந்தபட்சம் நேர்மையாக, எளிமையாக நம்பினால்கூட பெரும் பயன் கிடைக்கும்.

இந்த உலகம் நமக்குக் கற்றுத் தருவதெல்லாம், நாமே உடல், நாமே மனம் என்று நம்ப வைத்து நம்மைக் குறுகிய வட்டத்திற்குள் முடக்கி விடுகிறது. 

நமது உண்மையான இயல்பு தெய்வீகமானது; நாம் ஆன்ம சொரூபீகள். இந்த நமது இயல்பை தெய்வீக புருஷர்கள் நமக்கு நினைவூட்டுகிறார்கள். 

இந்த ஞானமும் போதமும் நமக்குக் கிடைக்கும்போது நாம் நமது மேலான நிலையை அடைகின்றோம். எங்கோ காட்டில் சுற்றிக் கொண்டிருந்தவன், தான் இளவரசன் என்பதைப் புரிந்து கொண்டு ஆட்சியைப் பிடித்த  கதைதான் நமக்குள் நடக்கிறது.

அந்த தெய்வீக நினைவூட்டலைப் புனிதமான சக்தியுடன் நமக்கு அருளியவர் ஸ்ரீராமகிருஷ்ணர்.

'நாம் தெய்வீகமானவர்கள்' என்பதை உணரும்போது தூங்கிக் கொண்டிருக்கின்ற நமது ஆன்மா விழித்தெழும். அதன் பின் என்ன நடக்கும் என்பதை சுவாமி விவேகானந்தருடைய வார்த்தைகளில் கவனியுங்கள்:

"….அளவுக்கதிகமான சோம்பல், அளவை மீறிய பலவீனம், ஆழ்ந்த மனவசியம் -இவை நம் இனத்தின் மீது படிந்துள்ளது. படிந்த வண்ணமே உள்ளது. ஓ தற்கால இந்துக்களே, மனவசியத்தில் இருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். அதற்கான வழி உங்கள் சாஸ்திரங்களில் உள்ளது. அதைப் படியுங்கள்.

"ஒவ்வொருவருக்கும் அவர்களின் உண்மையான இயல்பைப் போதியுங்கள். உறங்கும் ஆன்மாவை எழுப்புங்கள். அது எவ்வாறு விழித்தெழுகிறது என்பதைப் பாருங்கள். உறங்குகின்ற ஆன்மா மட்டும் விழித்தெழுந்து தன்னுணர்வுடன் செயலில் ஈடுபடுமானால் சக்தி வரும்; பெருமை வரும்; நன்மை வரும்; தூய்மை வரும்; எவையெல்லாம் மேலானதோ அவை அத்தனையும் வரும்."

-சுவாமி விவேகானந்தர் கும்பகோணத்தில் ஆற்றிய உரையிலிருந்து.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆசியானது உங்களுக்கு ஏதோ ஓரிரு பலன்களைத் தரக்கூடியது அல்ல; உலகிலுள்ள அனைத்து நன்மைகளும் உங்கள் ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் அவரது ஆசியின் சாரம்.

குருதேவரின் இந்த வாக்குறுதியை உறுதிப்படுத்தும் நிகழ்ச்சிகள் பல. அவற்றுள் ஒன்று இதோ:

ஸ்ரீராமகிருஷ்ணர் ஒருமுறை தம்மைப் பற்றி, ‘அமி கர்மநாசா, ஃபராஸ்டாங்கா’ என்றார்.

‘அமி கர்மநாசா’ என்றால் வங்கமொழியில் ‘என்னைச் சரண் புகுகிறவர்களின் கர்மவினைகளைப் போக்கி விடுவேன்’ என்று பொருள்.

‘ஃபராஸ்டாங்கா’ என்பது ஆங்கிலேய ஆட்சியில்லாத பிரெஞ்சுப் பகுதியைக் குறிக்கும். இதன் மூலம் ஸ்ரீராமகிருஷ்ணர் என்ன கூறுகிறார்?

"நான் (நமது நாட்டின் விடுதலைக்கு முன் இருந்த) பிரெஞ்சுப் பகுதி போன்றவன். ஆங்கில ஆட்சியில் அவர்களுக்கு எதிராகக்  குற்றமிழைத்தவர்கள், பிரெஞ்சுப் பகுதியான சந்தன் நகர் சென்று தப்பித்துக் கொள்வார்கள். அதுபோல் யார் என்ன செய்திருந்தாலும் என்னிடம் சரணாகதி அடைந்தால் அவர்களுக்கு எந்த பயமும் இல்லை" என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

சுவாமி விவேகானந்தர் ஸ்ரீராமகிருஷ்ணரை 'கபால மோசனர்' - ‘தலையெழுத்தையே மாற்றி எழுத வல்லவர்’ என்று கூறுகிறார்.

பொதுவாக, தம்மை இறைவனின் பக்தனாக, தாசனாகக் கருதிய ஸ்ரீராமகிருஷ்ணருக்குப் தம்மைப் பற்றிப் பிறர் கூறும் குரு, பாபா, கர்த்தா ஆகிய வார்த்தைகள் பிடிப்பதில்லை.

என்றாலும் அவர் தாமே ‘அமி கர்மநாசா’ என்று கூறியது ‘ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி’ - ‘பக்தனே! உன்னை நான் எல்லா பாவங்களிலிருந்தும்  விடுவிக்கிறேன்’ என்ற ஸ்ரீகிருஷ்ணரின் வார்த்தைகளின் வங்க மொழியாக்கம் போலுள்ளது.

சாரமாக, ஸ்ரீராமகிருஷ்ணர் நமக்கு அளிக்கும் அபய வார்த்தை "மனிதா! நீ உன் கர்மவினைகளைப் பார்க்காதே. என் கருணையைப் பார்" என்பதுதான்.

குருதேவரின் இந்த அருளில் திட நம்பிக்கை கொள்ளாது, பலரும் தங்கள் பாவங்களையும் பலவீனங்களையும் பற்றி மட்டுமே எண்ணி மருகுகின்றனர். தாயினும் சாலப் பரிந்தூட்டும் குருதேவரின் அருளிருக்க, நிம்மதியைத் தேடி அங்குமிங்கும் அலைய வேண்டாம்.

தூசி தீயில் விழுந்தால் பொசுங்கும்; அதை நாமே மெனக்கெட்டுக் கண்ணில் விழும்படி போட்டுக்கொண்டால் கலங்கடிக்கும். அதுபோல பாவச்சுமையை மனதில் நாமாகவே தக்கவைத்துக் கொண்டால் பெரும் துன்பம் தரும்.

பாவ சுமைகளையும், பாவ நினைவுகளையும், வறுமையையும், பலவீனங்களையும், எவையெல்லாம் உங்களுக்கு மன அழுத்தத்தைத் தருகிறதோ, அவற்றை எல்லாம் இந்த கல்பதரு நன்னாளில் பகவானின் திருவடியில் இறக்கி வைத்து விடுங்கள்.

இறைவனின் கருணை முன்பு நம் குற்றங்கள் அனைத்தும், ஆண்டாளம்மா கூறுவது போல ‘தீயினில் தூசு’ ஆகிவிடும்; மகாகவி பாரதி கூறுவது போல ‘பரிதி முன் பனித்துளி’ ஆகிவிடும்.

ஸ்ரீராமகிருஷ்ணர் இன்றும் நம்மிடையே நமக்குத் தம்மையே தரும் கற்பகமாக விளங்குகிறார். அவரது கல்பதரு வாக்குறுதியைப் பக்தி மற்றும் தொண்டின் மூலம் நாம் விரைவில் உணரலாம்.

'ஸ்ரீராமகிருஷ்ணர் என்ற நித்திய கல்பதருவின் அடியில் இளைப்பாற எனக்கும் ஓர் இடத்தை அவரே எனக்குத் தந்துள்ளார்' என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு ஸ்ரீராமகிருஷ்ண பக்தரும் உறுதியுடன் நிற்க வேண்டும்.

'தெய்வம் நமக்குத் துணை பாப்பா -

ஒரு தீங்கு வர மாட்டாது பாப்பா' என்பதே நமக்கு இந்தப் புத்தாண்டுச் செய்தியாக அமையட்டும்.

'உங்கள் அனைவருக்கும் ஆன்மீக விழிப்புணர்வு ஏற்படட்டும்' என்று அன்றைய பக்தர்களிடம் கூறிய ஸ்ரீராமகிருஷ்ணர், இன்று நம்மிடமும் அதையே கூறி நம்மை ஆசீர்வதிக்க மாட்டாரா என்று ஏங்குவோம்! 

அந்த ஏக்கம் ஜென்ம ஜென்மாந்திர மாகத் தூங்கிக்கொண்டிருக்கும் நம் ஆன்மாவைத் தட்டி எழுப்பும். அந்த இறை ஏக்கம் நமக்கு ஒவ்வொரு நாளும் புதுப்புது ஊக்கத்தைப் பெருக்கும். அந்த ஏக்கமே நமது தொடர் பிரார்த்தனையாக இருக்கட்டும். இந்த ஆண்டு முழுவதும் அந்தப் பயிற்சியிலேயே நம் வாழ்க்கை செம்மை ஆகட்டும்.

ஜெய் ஸ்ரீ ராமகிருஷ்ணா 

சுவாமி விமூர்த்தானந்தர்

31 டிசம்பர், 2020

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

thanjavur